Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்!

தமிழக பாஜக-வில் இருந்து அண்ணாமலை விலகினால், தமிழ்நாட்டில் பாஜக-வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக பாஜக இருந்தாலும், தமிழ்நாடு மட்டும் அவர்களுக்கு தாமரையில் ஒட்டாத தண்ணீர் போல இருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் பாஜக மெல்ல துளிர்விடத் தொடங்கியது தமிழிசை தலைவராக பொறுப்பு வகித்தபோது ஆகும்.
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை:
அதன்பின்பு, முருகனுக்கு பிறகு கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்ற அண்ணாமலை தமிழக பாஜக பற்றி தினசரி மக்கள் மத்தியில் பேச வைத்துக்கொண்டே இருந்தார். பாஜக என்ற கட்சியைக் கடந்து அண்ணாமலை என்ற தனிநபரின் செல்வாக்கு அதிகரித்தது. பாஜக என்று சொல்வதற்கு பதிலாக அண்ணாமலை என்று சொல்லும் அளவிற்கு அவரது செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்ந்தது.
கூட்டணி கட்சியினரையே கடுமையாக விமர்சித்தது, சொந்த கட்சியில் முன்னாள் மற்றும் மூத்த தலைவர்களின் அதிருப்தி போன்ற காரணங்களால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து ஓரங்கட்டினர். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை பல மாதங்களாக தமிழக பாஜக-வில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருந்து வருகிறார்.
தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
இந்த சூழலில், தனது செல்வாக்கை தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதிய அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்று கருதப்படுகிறது. அவரது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகினால் தமிழ்நாட்டில் பாஜக-விற்கு மிகப்பெரிய சறுக்கல் உண்டாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனென்றால், அண்ணாமலை பெரியளவு தேர்தல் பரப்புரைகளிலும், கடந்த தேர்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத சூழலில் பாஜக இந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே கைவசம் இருந்த 4 இடங்களில் இருந்து 1 இடத்திற்கு கீழே சென்றது.
கானல்நீராகும் பாஜக-வின் கனவு:
அண்ணாமலையும் கட்சியில் இருந்து விலகி புதுக்கட்சியைத் தொடங்கினால், பாஜக-வில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் கீழ்மட்டத்தில் உள்ள பாஜக-வினர் அனைவரும் அவர் தொடங்கும் கட்சியிலே இணைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், தமிழ்நாட்டில் துளிர்விடும் பாஜக-வின் கனவு கானல்நீராகவே மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலையை சமாதானப்படுத்தி பாஜக-விலே தக்கவைக்க டெல்லி தலைமை கருதினாலும், தான் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டாலே சில தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று அண்ணாமலை வியூகம் வகுத்துள்ளார். மேலும், பாஜக மீதான எதிர்ப்பே அண்ணாமலையும் தமிழ்நாட்டில் பெரியளவில் வளர்வதற்கும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தனித்து செயல்படும்போது அந்த எதிர்ப்பு இருக்காது என்றும் அவர் கருதியே தனிக்கட்சி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


