திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு சாரரும், தவெக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு சாரரும் என களத்தில் தீவிரமாக பேசி வருகின்றனர். தவெக தரப்பிலும், ‘70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு’ என்றெல்லாம் காங்கிரஸுக்கு தூண்டில் போடப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, திமுகவுடன் கூட்டணி குறித்து பேச 70 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கிறோம் என வெளிப்படையாகவே சொல்லி அதிர்ச்சியூட்டினார் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். இதனை தொடர்ந்து பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவோம் என திமுக அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் ஒத்துவராது என்று உறுதியாக சொல்லியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என கிளப்பி விட்டு, சிலர் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அது எடுபடாது.
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும்” என பொட்டில் அடித்தாற்போல சொல்லியுள்ளார்.